கேரளாவில் ரெட் அலர்ட்: தேக்கடியில் படகு சவாரிக்கு 3 நாள் தடை
- பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. 16 வருடங்களுக்கு பின் முன்கூட்டியே 8 நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3 நாட்கள் தேக்கடி படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண் சரிவு ஏற்படும் இடங்கள், மரங்கள் முறிந்து விழும் பகுதி ஆகியவற்றை கண்காணித்து அங்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 585 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 114.90 அடியாக உள்ளது.
1710 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 52.85 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. அணையில் 2389 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 94.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
அரண்மனைப்புதூர் 2, வீரபாண்டி 13.8, பெரியகுளம் 4.6, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 2, வைகை அணை 1.4, போடி 3.2, உத்தமபாளையம் 4.6, கூடலூர் 2, பெரியாறு அணை 27.6, தேக்கடி 21.4, சண்முகாநதி 1.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.