தமிழ்நாடு செய்திகள்

ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

Published On 2025-10-31 12:08 IST   |   Update On 2025-10-31 12:08:00 IST
  • இன்று 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது.
  • வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு உருவானது.

சென்னை:

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.

தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரா நோக்கி போனதால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வரை தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

இந்த பருவமழை காலத்தின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி மூலம் இயல்பை விட கூடுதலாகவே மழை கிடைத்தது. வட மாவட்டங்களில் அதிக மழையை எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்துடன் கடந்து சென்றது.

இந்த நிலையில் இன்று 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது. வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு உருவானது. இது வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வட கிழக்கு நோக்கி, கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு ஜார்க்கண்ட் வழியாக பீகாரை நோக்கி நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் படிப்படியாக பலவீனம் அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலையில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் படிப்படியாக பலவீனம் அடையும் என்று தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News