தமிழ்நாடு செய்திகள்

அடுத்தடுத்து விடுமுறை நாட்கள்- சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2025-04-09 12:08 IST   |   Update On 2025-04-09 12:08:00 IST
  • பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
  • பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகாவீா் ஜெயந்தி தினமான நாளை (10-ந் தேதி), வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான திங்கட்கிழமை (14-ந் தேதி) ஆகிய தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, இன்றும் (புதன்கிழமை), வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 190 பஸ்களும், நாளை மறுநாள் 525 பஸ்களும், சனிக்கிழமை 380 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 50 பஸ்களும், வெள்ளிக்கிழமை 100 பஸ்களும், சனிக்கிழமை 95 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இது போல, மாதவரத்தில் இருந்து இன்று 20 சிறப்பு பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுதவிர, திங்கட்கிழமை (14-ந்தேதி) பொதுமக்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News