தமிழ்நாடு

அந்தியூரில் பரபரப்பு: நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர்

Published On 2023-03-22 07:45 GMT   |   Update On 2023-03-22 07:45 GMT
  • நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார்.
  • நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதை பாலி என்ற பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனது விவசாய தோட்டத்தில் கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வரும் கோழிகளை அடிக்கடி ஒரு நாய் பிடித்து சென்றது. இது குறித்து அண்ணாதுரை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மோகன்ராஜ் (28) என்பவரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு ஜி.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஒரு நாய் அண்ணாதுரையின் விவசாய தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றது. அப்போது அந்த நாய் தான் கோழிகளை பிடித்து சென்ற நாய் என்று கருதி அண்ணாதுரை இது குறித்து தனது நண்பர் மோகன்ராஜிக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மோகன்ராஜ் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து அந்த நாயை சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நாய் அங்கேயே இறந்துவிட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு காயத்துடன் இறந்து கிடந்த நாயை மீட்டனர். மேலும் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

இறந்த நாயின் உடல் இன்று கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News