தமிழ்நாடு

திருப்பூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த கும்பல்

Published On 2023-05-27 09:36 GMT   |   Update On 2023-05-27 09:36 GMT
  • நான் கடந்த 25-ந்தேதி வேலைக்காக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 8 மணிக்கு வந்து இறங்கினேன்.
  • எனக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 பேரும் நகை, பணத்தை பறித்து சென்று விட்டனர்.

திருப்பூர்:

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை கீழ செல்லையாபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் சூர்யா (வயது 33). இவர் இன்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 25-ந்தேதி வேலைக்காக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 8 மணிக்கு வந்து இறங்கினேன். அப்போது அங்கு வந்த சரண், பாண்டி மற்றும் ஒருவர் ஆகியோர் என்னிடம் விசிட்டிங் கார்டு கொடுத்து உங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம். எங்களுடன் வாருங்கள் என்று அழைத்தனர். அதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன்.

இதையடுத்து அவர்கள் என்னை கரூருக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள லாட்ஜில் என்னை தங்க வைத்தனர். அப்போது அவர்கள் எனக்கு பழ ஜூஸ் கொடுத்தனர். அதை குடித்ததும் சிறிது நேரத்தில் மயங்கி விட்டேன். அதன்பிறகு எழுந்து பார்த்தபோது நான் அணிந்திருந்த அரை பவுன் தங்க செயின், கால் கொலுசு, செல்போன் மற்றும் ரூ.50ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை.

எனக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 பேரும் நகை, பணத்தை பறித்து சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சூர்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மயக்க மருந்து கொடுத்து தன்னை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ததுடன், நகை, பணத்தை கும்பல் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News