தமிழ்நாடு

மனைவி கதவை திறக்காததால் வீட்டில் சுவர் ஏறிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

Published On 2023-01-23 08:21 GMT   |   Update On 2023-01-23 08:21 GMT
  • நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.
  • நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி வி.ஐ.பி. நகர் தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது 30) மார்க்கெட்டிங் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

அந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

தென்னரசு வீட்டில் உள்ள காலிங்பெல்லை அழுத்தினார். பலமுறை அழுத்தி சத்தம் கேட்டும் அவரது மனைவி கண் விழிக்கவில்லை.

இதனை தொடர்ந்து அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்போதும் அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தென்னரசு 2-வது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சுவர் வழியாக ஏற முயன்றார். அப்போது தவறி வீட்டுக்கு பின்புறம் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதற்கிடையே நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவரது உறவினர் அங்கு வந்து தென்னரசுக்கு போன் செய்தார்.

அப்போது வீட்டின் பின்புறம் இருந்து தென்னரசுவின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது தென்னரசு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News