தமிழ்நாடு செய்திகள்

நம்பியாற்றில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்த காட்சி.

நம்பியாறு அணையில் இருந்து நீர் திறப்பு: 1,744 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும்

Published On 2024-01-24 12:44 IST   |   Update On 2024-01-24 12:44:00 IST
  • வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது.
  • பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்காக அமைந்துள்ள 7 மற்றும் 8-வது அணைக்கட்டுகளுக்கு இடையில் நம்பியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 40 குளங்கள் வாயிலாக சுமார் 1,744 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது. அதில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இன்று நம்பியாற்றின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,744 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும். இந்த தண்ணீரானது வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 60 கனஅடிக்கு மிகாமல் 68 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீரின் மூலமாக ராதாபுரம் வட்டாரத்தில் கோட்டைக் கருங்குளம், கஸ்தூரி ரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தன்மொழி, கரைசுத்துபுதூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும். 

Tags:    

Similar News