தமிழ்நாடு செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து கிடப்பதை காணலாம்

சங்கரன்கோவிலில் சுவர் இடிந்து விழுந்து தந்தை-மகள் படுகாயம்

Published On 2022-07-23 10:52 IST   |   Update On 2022-07-23 10:52:00 IST
  • இடிந்து விழுந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் இருக்கும்.
  • தந்தையும் மகளும் வெளியே கிளம்புவதற்காக சென்ற நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 2-ம் தெருவில் 11 வீடுகள் கொண்ட குடியிருப்பு உள்ளது.

இந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டிடம் முறையான பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த குடியிருப்பில் ஒரு வீட்டில் வசித்து வருபவர் ரஹீம் (45). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செய்யதலிபாத்திமா என்ற மனைவியும், ரபீக் (9) என்ற மகனும், ரூபினா (7) என்ற மகளும் உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரஹீம் கிளம்பினர்.

அப்போது 2-ம் வகுப்பு படிக்கும் அவருடைய மகள் ரூபினாவும் கிளம்புவதற்காக சென்ற நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் ரூபினா மற்றும் அவரது தந்தை ரஹீம் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News