தமிழ்நாடு

40 நாட்டு வெடிகுண்டுகள்-துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த 2 ரவுடிகள் கைது

Published On 2022-12-03 08:59 GMT   |   Update On 2022-12-03 08:59 GMT
  • ரவுடி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி அப்பு ஆகியோர் பூந்தமல்லி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
  • ரவுடிகள் வேட்டையை தொடர்ந்து தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ராயபுரம்:

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ். பிரபல ரவுடியான இவர் மீது கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர், மறைமலை நகர், சி.பி.சி.ஐ.டி. போலீசில் பிரகாஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பிரகாஷ் மீது உள்ளது. ஆயு தங்கள், வெடிபொருளை பதுக்கி வைத்திருந்ததாகவும் பிரகாஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரவுடி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி அப்பு ஆகியோர் பூந்தமல்லி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் ரவுடிகள் பிரகாஷ், அப்பு இருவரும் தப்பி ஓட முயன்றனர். இருவரையும் துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 40 நாட்டு வெடிகுண்டுகள், 12 தோட்டாக்கள், கைத்துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் பிடியில் இருந்து இருவரும் தப்பி ஓடினர்.

அப்போது இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் கை, கால்கள் உடைந்தன. இதையடுத்து பலத்த காயத்துடன் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று ரவுடிகள் வேட்டையை தொடர்ந்து தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News