தமிழ்நாடு

பெண்ணாடம் அருகே 2 பிரிவினர் மோதல்- தி.மு.க. பிரமுகர் வீட்டிற்கு தீ வைப்பு

Published On 2022-12-06 10:18 GMT   |   Update On 2022-12-06 10:18 GMT
  • ஆத்திரமடைந்த ராஜா தரப்பினர் துறையூரை சேர்ந்த நசின்ராஜா தரப்பினரை தாக்கியுள்ளனர்.
  • தகராறு ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள முருகன்குடியைச் சேர்ந்த நாத்திகன் என்பவரது மகன் நசின்ராஜ், அதே பகுதியில் உள்ள துறையூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மகன் ராஜா. இவ்விருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-யில் இருவரும் படித்து வருகின்றனர். தங்களது கிராமத்திலிருந்து பஸ்சில் ஐ.டி.ஐ.,-க்கு சென்று வருவர். அப்போது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்படும்.

இவ்விருவருக்கும் ஐ.டி.ஐ.,-யில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை மறித்து தாக்கினர். இதற்கு பதிலடியாக முருகன்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற நசின்ராஜா தனது உறவினர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கினார்.

இதுகுறித்து புகாரளிக்க ராஜா தரப்பினர் நேற்றிரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அது சமயத்தில் துறையூர் பஸ் நிறுத்தத்தில் ராஜா தரப்பினர் நின்று சம்பவம் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது துறையூரில் உள்ள நசின்ராஜ்-ன் சமூகத்தை சேர்ந்த ஒரு நபர், ராஜா தரப்பினரை ஜாதியை சொல்லி தகாத வார்த்தையில் (அசிங்கமாக) திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினர் துறையூரை சேர்ந்த நசின்ராஜா தரப்பினரை தாக்கியுள்ளனர். தகவலறிந்த துறையூரைச் சேர்ந்த இரு சமுகத்தினரும் துறையூர் பஸ் நிறுத்தத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பெண்ணாடம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்கு கட்டுப்படாத இரு தரப்பும் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சின்னதுரை, சுப்பரமணியன், கோதண்டராமன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு துறையூரைச் சேர்ந்த இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருபிரிவினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் சக்திகணேசன், இரு சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தார். மேற்கொண்டு தகராறு ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜாவின் உறவினரான துறையூர் தி.மு.க. கிளைச் செயலாளர் மதியழகன் கூரை வீடு திடிரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் பதட்டம் மேலும் அதிகரித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் மின் கசிவினால் வீடு தீப்பிடித்ததா, யாரேனும் கொளுத்தி விட்டனரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News