தமிழ்நாடு செய்திகள்

ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

Published On 2022-10-03 13:10 IST   |   Update On 2022-10-03 13:10:00 IST
  • நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.
  • தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து வருகிற 9-ம் தேதி வரையும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் நாளை (4-ந்தேதி) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை மறுநாள் 5-ந்தேதி விஜயதசமி, பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. ஆகவே நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.

இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ஏற்காட்டுக்கு கார், சுற்றுலா வாகனங்கள், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று காலை கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். லேசான சாரல் மழையும், பனியும், குளுமையான சீதோஷ்ண நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர்.

ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது.

Tags:    

Similar News