தமிழ்நாடு

கோவை வந்த வந்தே பாரத் ரெயில் முன்பு செல்பி எடுத்து கொண்ட பெண்.

இன்று சோதனை ஓட்டம்: சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 5 மணி 40 நிமிடத்தில் சென்றது

Published On 2023-03-30 08:28 GMT   |   Update On 2023-03-30 08:28 GMT
  • வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.
  • 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது.

சென்னை:

சென்னை சென்ட்ரல்-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.

16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது. ஆனால் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த வழி தடத்தில் சதாப்தி, இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாலும் 16 பெட்டிகள் இயக்கினால் காலியாக ஓடும் என்பதாலும் 8 பெட்டிகளாக குறைத்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வந்தே பாரத் ரெயில் பெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இன்று சோதனை ஓட்டம் மேற் கொள்ளப்பட்டது.

சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று சென்றது. 130 கி.மீ. வேகத்திற்கு இந்த ரெயிலை இயக்க முடியும் என்றாலும் அதைவிட குறைந்த வேகத்திலேயே இயக்கி சோதனை செய்யப் பட்டது.

மற்ற ரெயில்களை விட குறைவான நிறுத்தம், வேகம் அதிகரிப்பு காரணமாக வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 6½ மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் சரியாக காலை 11.20 மணிக்கு கோவை சென்றடைந்தது. 5 மணி 40 நிமி டத்தில் ரெயில் கோவையை அடைந்தது. இதன்மூலம் ரெயில் சோதனை ஓட்டம் திட்டமிட்டப்படி நடந்துள்ளது.

பிற்பகல் கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு முன்னதாக சென்ட்ரல் வந்து சேருகிறது. வாரத்தில் ஒரு நாள் தவிர 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

சோதனை ஓட்டத்தின் போது ஏதாவது தொழில் நுட்ப கோளாறு, பிரச்சினை ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News