தமிழ்நாடு

திருப்பூர் காப்பகத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்டு

Published On 2022-10-19 04:16 GMT   |   Update On 2022-10-19 04:16 GMT
  • கடந்த 7-ந்தேதி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
  • மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 மாணவர்கள் கடந்த 5-ந்தேதி உயிரிழந்தனர். 11 மாணவர்கள் மற்றும் காவலாளி என 12 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள அரசு காப்பகம் மற்றும் வீடுகளுக்கு திரும்பினர்.

இதற்கிடையே கடந்த 7-ந்தேதி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், "குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் மூடப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூகபாதுகாப்பு த்துறையின் நன்னடத்தை அலுவலர் நித்யா (பொறுப்பு) பதவி ஏற்றார். 3 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News