தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2023-02-06 12:15 IST   |   Update On 2023-02-06 12:15:00 IST
  • குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவருடைய மகன் மாயக்கண்ணன் (வயது 24). பொறியியல் பட்டதாரியான இவர், சம்பத்தன்று மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான திப்பம்பட்டி காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது அவர் ஆற்றின் ஒரு கரையிலிருந்து, மறுக்கரைக்கு நீந்தி செல்ல முயன்றார். சிறிது தூரம் நீந்தி சென்ற மாயக்கண்ணனால், ஆற்றில் நீண்ட நேரம் நீந்த முடியவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்த அவர், திடீரென ஆற்றில் மூழ்கினார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள், மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பரிசலில் சென்று, சுமார் அரை மணி நேரம் தேடி மாயக்கண்ணனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News