தமிழ்நாடு

காயம் அடைந்த செந்தில்குமார்.

பீர் பாட்டில் வெடித்து கண்பார்வை இழந்த டாஸ்மாக் விற்பனையாளர்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2023-04-16 08:18 GMT   |   Update On 2023-04-16 08:18 GMT
  • உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி செந்தில்குமாரின் கண்ணில் பட்டது.
  • டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் அங்களக்கரைபுதூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது40) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் மதுவாங்குவதற்காக டாஸ்மாக் கடைக்கு வந்தார்.

அவர் கடையில் இருந்த செந்தில்குமாரிடம் 2 பீர்பாட்டில்கள் தருமாறு கேட்டார். இதையடுத்து செந்தில்குமாரும் பாட்டில்களை எடுத்து வந்தார்.

பின்னர் அந்த பாட்டில்களில் ரூ.10க்கான ஸ்டிக்கர் ஒட்டினார். ஒரு பாட்டிலில் ஒட்டி, அதனை வாடிக்கையாளரிடம் கொடுத்து விட்டு, மற்றொரு பாட்டிலில் ரூ.10க்கான ஸ்டிக்கரை ஒட்டி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பீர்பாட்டில் உடைந்தது.

உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி, செந்தில்குமாரின் கண்ணில் பட்டது. இதில் கண்ணாடி அவரது கருவிழியை கடுமையாக தாக்கியது.

வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

அப்போது, கருவிழியில் கண்ணாடி கடுமையாக தாக்கியதில் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமாரை கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மேலும் அவருக்கு உரிய சிகிச்சை விரைவாக அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறி சென்றனர். இதற்கிடையே வெயிலின் தாக்கத்தாலேயே பீர்பாட்டில் வெடித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News