தமிழ்நாடு செய்திகள்

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு தீ விபத்தில் தீக்காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

Published On 2022-07-05 12:42 IST   |   Update On 2022-07-05 12:42:00 IST
  • குப்பைக்கிடங்கில் மாநகராட்சி 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.
  • தீயணைப்பு வீரர்கள் பலத்த தீக்காயத்துடன் ஆரோக்கியசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் மாநகராட்சி 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை இந்த குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் தீ மளமளவென பரவியது. அப்போது குப்பைக்கிடங்கில் இருந்து தீப்பொறி சீனிவாசபுரம் செக்கடித்தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான ஆரோக்கியசாமி (வயது 72) வீட்டு குடிசை மீது விழுந்தது.

மேலும் அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துகொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் வீட்டுக்குள் நடக்க முடியாமல் ஆரோக்கியசாமி சிக்கி கொண்டார்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பலத்த தீக்காயத்துடன் ஆரோக்கியசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியசாமி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News