அனுமதியின்றி செயல்படும் பிளாஸ்டிக் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
- எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை ஆலையை மூட வேண்டும்.
- ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த ஏராளமான பொது மக்கள் வந்து மனுக்களை அளித்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை ஆலையை மூட வேண்டும். இந்த ஆலையால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. ஆழ்துளை கிணறு நீர் மாசுபடுகிறது என்று குற்றம் சாட்டினார். பொதுமக்கள் மனு கொடுக்க வந்த போது கலெக்டர் அங்கு இல்லை. அவர் மற்றொரு அரசு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதனால் பொதுமக்கள் அங்கேயே காத்திருந்தனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலை செயல்படுகிறது. இதனை மூடக்கோரி பஞ்சாயத்து தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் ஏற்கனவே மனு அளித்துள்ளோம். அந்த ஆலைைய மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனாலும் ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.