தமிழ்நாடு செய்திகள்

நீர்மட்டம் குறைந்த நிலையில் 16 கண் மதகுகள் அருகே தண்ணீர் சூழ்ந்து இருந்த நிலை மாறி வறண்டு காணப்படுவதை படத்தில் காணலாம்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-07-07 09:25 IST   |   Update On 2023-07-07 09:25:00 IST
  • காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
  • கடந்த 2-ந்தேதி மாலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 700 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை முதல் விநாடிக்கு 500 கன அடியாக சரிந்துள்ளது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 142 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 226 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதன் பிறகு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2-ந்தேதி மாலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பாசனத்திற்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இன்று காலை 6 மணி முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

நேற்று 85.16 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 84.34 அடியாக சரிந்தது.

Tags:    

Similar News