தமிழ்நாடு

வி.கே.புரத்தில் மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் மரணம்- கொலை வழக்காக மாற்றம்

Published On 2023-08-11 05:00 GMT   |   Update On 2023-08-11 05:00 GMT
  • படுகாயம் அடைந்த முத்துக்குட்டி நெல்லை அரசு மருத்துவமனையிலும், ஆதி லெட்சுமணன் அம்பை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குட்டி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள முதலியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி(வயது 56). இவரது மகளை, அதே பகுதியை சேர்ந்த தர்மர் மகன் ஆதி லெட்சுமணன் (38) என்பவர் திருமணம் செய்துள்ளார்.

இவர்களது மகன் தருண் (7). சம்பவத்தன்று தருணை முத்துக்குட்டி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதை அறியாத ஆதி லெட்சுமணன் தனது மகன் மாயமானதாக நினைத்து தேடி உள்ளார். பின்னர் உண்மை அறிந்ததும் இதுகுறித்து மாமனார் முத்துக்குட்டியிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் அரிவாளால் மாறி, மாறி வெட்டிக்கொண்டனர்.

இதில் படுகாயம் அடைந்த முத்துக்குட்டி நெல்லை அரசு மருத்துவமனையிலும், ஆதி லெட்சுமணன் அம்பை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குட்டி இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News