தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் யு.பி.ஐ. வசதி அறிமுகம்

Published On 2023-05-27 08:05 GMT   |   Update On 2023-05-27 08:05 GMT
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன.

சென்னை:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரையில் காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.

இதன் மூலம் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன.

மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் என்.இ.எப்.டி, ஆர்.டி.ஜி.எஸ். உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.

ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News