தமிழ்நாடு

காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற ஊழியர்கள்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்- பெண் பலி

Published On 2023-05-15 03:40 GMT   |   Update On 2023-05-15 03:40 GMT
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.

கொடைக்கானல்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி பழனி மலைச்சாலை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. 5-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News