ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முக்கிய மீன்பிடி தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
- தமிழக அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முக்கிய மீன்பிடி தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்களை அடிக்கடி சிறைப்பிடித்து செல்வதும், மீன்களை பறித்துக் கொண்டு படகுகளை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் மீனவர்கள் மாதம்தோறும் மானிய விலையில் அரசு வழங்கும் 1800 லிட்டர் டீசல் அளவை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படை 125 விசைப்படகுகளை சிறைப்பிடித்ததால் வாழ்வாதாரம் இழந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களுக்கு அரசு அறிவித்த தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட 30 விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நேற்று மட்டும் மீனவர்களுக்கு ரூ.1 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் இன்று (11-ந்தேதி) 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் இன்று மீன் பிடிக்க சென்றனர். மேலும் வருகிற 13-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டு கொண்டுள்ளனர். இன்றும் மீன் பிடிக்க செல்லாததால் ரூ.1 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டதால் தங்கள் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.