தமிழ்நாடு
சத்யா

பிரசவத்துக்கு 7 நாட்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-09-27 04:03 GMT   |   Update On 2022-09-27 04:03 GMT
  • பிரசவத்துக்கு 7 நாட்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1 வருடமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (60). இவரது மகள் சத்யா (25). பட்டதாரியான இவருக்கும், சிவகிரி அருகே உள்ள சுள்ளிபரப்பை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் சஞ்சய் அருள் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு சத்யாவுக்கு வளைகாப்பு நடத்தி அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். சஞ்சய் அருள் அவ்வப்போது தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை பார்த்து வந்துள்ளார். சத்யா பிரசவத்துக்கு இன்னும் 7 நாட்களே இருந்தது.

இந்நிலையில் சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும், அதற்காக கார் எடுத்து கொண்டு வருமாறும் சத்யாவின் தந்தை மருமகன் சஞ்சய் அருளுக்கு நேற்று போன் செய்துள்ளார். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் நாளை மருத்துவமனைக்கு செல்லலாம் என்றும் சஞ்சய் அருள் கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த சத்யா வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார். கோபம் ஏற்படும் போதெல்லாம் சத்யா இதுபோல் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவராகவே வெளியில் வந்து விடுவது வழக்கம்.

அதனால் இப்போதும் சத்யா அவ்வாறு ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்துவிடுவார் என நினைத்து அவரது பெற்றோர்கள் தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் வெகு நேரமாகியும் சத்யா வெளியே வராததால் அவரது தாயார் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

அப்போது மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சத்யா தொங்கியுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து சத்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சத்யா வயிற்றில் இருந்த குழந்தையை பரிசோதித்த போது குழந்தையும் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1 வருடமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

பிரசவத்துக்கு 7 நாட்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News