ஆடி மாதத்தில் ஆர்டர் இல்லாததால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுமுறை
- ஆடி மாதம் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறாது. இதுபோல் வடமாநிலங்களிலும் சுப நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது.
- கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துவிட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றில் லுங்கி, கர்ச்சீப், துண்டு, வேட்டி என அனைத்துவித ஜவுளி ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், ஆடி மாதத்தில் ஜவுளி உற்பத்திக்கு ஆர்டர் இல்லாதது, உற்பத்தி செய்த ஜவுளிகள் தேக்கம் காரணமாக இங்குள்ள விசைத்தறி கூடங்களுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியுள்ளார்.
ஆடி மாதம் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறாது. இதுபோல் வடமாநிலங்களிலும் சுப நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. எனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு ஆர்டர் கிடைக்காது.
இதையடுத்து ஒரு வாரம் ஜவுளி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி நேற்று முதல் ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் உற்பத்தி செய்த ஜவுளி ரகங்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. தற்போது ஆர்டரும் கிடைக்காத நிலை உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும்.
எனவே ஜவுளி வியாபாரத்திற்கு ஆண்டு முழுவதும் ஆர்டர் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ஒரு வார கால விடுமுறையால் 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பி.எஸ்.கந்தசாமி கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துவிட்டது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே விசைத்தறி கூடங்கள் செயல்பட்டது. மற்ற 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனை ஆகாமல் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பல விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதே நிலை நீடித்தால், விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
வழக்கமாக தீபாவளி, பொங்கல், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பண்டிகை நேரங்களில் ஆர்டர், உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். தற்போது ஆடி பிறந்த நிலையில் ஆர்டர்கள் இல்லாததால், விற்பனையும் இல்லை. இதனால் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 3 மாதங்களில் தீபாவளி வர உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ஆடிபெருக்கு பண்டிகைக்கு ஆர்டர் வரும். தற்போது அதுவும் இல்லாத நிலையில், தீபாவளி ஆர்டர் கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.