தமிழ்நாடு செய்திகள்

அனுமதியின்றி போராட்டம்: கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Published On 2023-10-07 12:40 IST   |   Update On 2023-10-07 12:40:00 IST
  • காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் திரண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கோவை:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் பா.ஜ.கவினர் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை கண்டித்து நேற்று மாலை கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.

மேலும் இந்த போராட்டத்தின் போது பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பா.ஜ.க.வினரும் அங்கு திரண்டனர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் திரண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பா.ஜ.க.வினர் போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பாஜக மாநில துணை தலைவர் ப்ரீத்தி லட்சுமி, கோவை மாவட்ட துணை தலைவர் குமரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் 6 பேர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News