மின்சார ரெயிலில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் காலை உரசி மாணவி பயணம்- பயணிகள் அதிர்ச்சி
- ஏற்கனவே ஒரு மாணவியும், மாணவர்களும் ரெயிலில் சாகச பயணம் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தற்போது மாணவி ஒருவர் மீண்டும் ரெயிலில் சாகச பயணம் செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:
மின்சார ரெயிலில் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ரெயில்வே பிளாட்பாரத்தில் கால்களை தரையில் உரசியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த பதை பதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று மாலை வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் வரை செல்லும் மின்சார ரெயில் வந்து நின்றது. அப்போது ஒரு பெட்டியின் வாசலில் பள்ளி சீருடையில் மாணவியும், மாணவரும் நின்றனர்.
ரெயில் புறப்படும் வரை பிளாட்பாரத்தில் இறங்கி நின்ற நபர்கள் ரெயில் புறப்பட்டதும் ஏறினர். அப்போது மாணவி மட்டும் தனது ஒரு காலை பிளாட்பாரத்தில் உரசியபடி சாகசம் செய்தார்.
இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மாணவி எந்த பயமும் இல்லாமல் பிளாட்பாரம் முடியும் வரை தனது சாகசத்தை தொடர்ந்தார்.
இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வீடியோவில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் ஏற்கனவே ஒரு மாணவியும், மாணவர்களும் ரெயிலில் சாகச பயணம் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவி ஒருவர் மீண்டும் ரெயிலில் சாகச பயணம் செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.