தமிழ்நாடு செய்திகள்

ஏரல் அருகே உற்சாகமாக நடனமாடியபடி நடைபயிற்சி செல்லும் முதியவர்கள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

Published On 2023-10-27 09:23 IST   |   Update On 2023-10-27 09:23:00 IST
  • சிறுவயது மரணங்களை தடுக்க மருத்துவர்கள் போதிய உடற்பயிற்சி மற்றும் உளப்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
  • நடைபயிற்சி செல்லும் போது சற்று வித்தியாசமாக உற்சாக நடனத்துடன் கூடிய நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்துங்கநல்லூர்:

தற்போதைய நவீன காலகட்டத்தில் சிறு வயது மரணங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள், இளம் வாலிபர்களுக்கு மாரடைப்பு அதிக அளவில் வந்து சிறு வயது மரணங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

இதனை தடுக்க மருத்துவர்கள் போதிய உடற்பயிற்சி மற்றும் உளப்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் பலர் மருத்துவரின் அறிவுரையை உதாசீனப்படுத்தி பல்வேறு சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தினமும் அதே பகுதியை சேர்ந்த முதியவர்கள் மருத்துவர் மார்ட்டின் தாமஸ், தொழிலதிபர் செல்வராஜ் மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மேலாளராக பணியாற்றும் ஒருவர் ஆகியோர் தினமும் ஏரல் பாலத்தின் அருகே தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். ஆனால் இவர்கள் நடைபயிற்சி செல்லும் போது சற்று வித்தியாசமாக உற்சாக நடனத்துடன் கூடிய நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் மருத்துவர் மார்ட்டின் தாமஸ் மற்றும் தொழிலதிபர் செல்வராஜ் ஆகியோர் நடனமாடியவாறு நடைபயிற்சி சென்று கொண்டிருக்கையில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர், அவர்கள் இருவரையும், செல்போனில் வீடியோ எடுத்தவாறு அவர்களுடன் உற்சாக நடனத்துடன் வாக்கிங் செல்கிறார். இவை அனைத்தையும் அங்கு சென்று கொண்டிருந்த மற்றொரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது உள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்ற ஒன்று இல்லாமல் போய்விட்ட நிலையில் இளம் மரணங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் 78 வயதை கடந்த இந்த இருவர் இந்த வயதிலும் உற்சாகத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News