தமிழ்நாடு

தூத்துக்குடியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலி

Published On 2022-09-09 06:58 GMT   |   Update On 2022-09-09 06:58 GMT
  • காலையில் வீட்டில் இருந்த ஜெகதீஷ் எதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார் என்பது தெரியவில்லை.
  • ஜெகதீஷை யாரேனும் அழைத்து சென்றார்களா? என சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கூறினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன். உப்பள தொழிலாளி. இவரது மகன் ஜெகதீஷ் (வயது26). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் பழையகாயல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இன்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்த ஜெகதீஷ் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

சிறிதுநேரத்தில் தூத்துக்குடி துறைமுகம் புறவழிச்சாலை உப்பாற்று பாலம் ஓடை அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ஜெகதீஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஜெகதீஷ் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, காலையில் வீட்டில் இருந்த ஜெகதீஷ் எதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார் என்பது தெரியவில்லை. அவரை யாரேனும் அழைத்து சென்றார்களா? என சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News