மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3320 கனஅடியாக அதிகரிப்பு
- கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
- இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதியுடன் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து இந்த மாதம் திறந்து விட வேண்டிய தண்ணீரையும் திறந்து விடவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 3297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 3320 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அதே போல் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.