தமிழ்நாடு

வரத்து குறைவு எதிரொலி- மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இஞ்சி விலை உயர்வு

Published On 2023-06-18 05:24 GMT   |   Update On 2023-06-18 05:24 GMT
  • நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
  • மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது.

இங்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் ஏல முறையில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.

இந்த மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.

இதில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

கடந்த வாரத்தை காட்டிலும் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோல தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News