ஏர்வாடி அருகே லாரி மீது கர்நாடகா பஸ் மோதல்: ஐயப்ப பக்தர் பலி
- விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்:
கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர் உள்பட 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி கர்நாடக பக்தர்கள் குழுவினர் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று இரவு ராமேசுவரத்திற்கு பஸ்சில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புல்லந்தை நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது கர்நாடக பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பெல்லாரியை சேர்ந்த கண்ணப்பா என்பவரின் மகன் சந்தீப்(வயது25) என்பவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.