பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட அதிக வாய்ப்பு- மாநில நிர்வாகி பேட்டி
- வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது.
- தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
கோவை:
கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி வாரியாக மக்களோடு மய்யம் என்கிற தலைப்பில் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. மக்கள் தெரிவிக்கும் குறைகளை கேட்டு, உடனே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது. அதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இருந்தாலும் இதில் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது.
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணியுடன் இணைந்து நிற்கலாமா என்பது குறித்து மக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.