தமிழ்நாடு

வீட்டின் வெளியே கேமரா பொருத்தியதில் தகராறு- தொழிலாளி கொலை

Published On 2023-03-26 06:02 GMT   |   Update On 2023-03-26 06:02 GMT
  • வேலுசாமி குடும்பத்திற்கும், வடிவேல் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • தலைமறைவாக இருந்த வேடி மற்றும் 17 வயது சிறுவனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

கீழ்ன்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது 51). மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (45). இவர்களுக்கு தமிழழகன் (17), கோபிநாத் (12). என 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் வடிவேல். இவரது மனைவி சாந்தி (42). தம்பதிகளுக்கு வேடி (19), 17 வயது உடைய சிறுவன் ஒருவன் என 2 மகன்கள் உள்ளனர்.

வேலுசாமி குடும்பத்திற்கும், வடிவேல் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பகல் வேலுசாமி வீட்டின் முன்பு கேமரா பொருத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது சாந்தி ஏன் எங்களது வீடு தெரிகிற மாதிரி கேமரா பொருத்துகிறாய் என்று வேலுசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு வேலுசாமி நீங்கள் அடிக்கடி என்னிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் அதனால் கேமரா பொருத்துகிறேன் என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த வேலுசாமி சாந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட சாந்தியின் மகன்கள் வேடி மற்றும் சிறுவன் ஓடி வந்து வேலுசாமியை அடித்து உதைத்து அருகில் இருந்த மண்வெட்டியால் தலையில் தாக்கினர்.

இதில் வேலுசாமியின் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க வந்த வேலுசாமியின் மனைவி சுசிலா, தாயார் நல்லம்மா ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேலு சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வேடி மற்றும் 17 வயது சிறுவனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News