ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக சரிவு
- ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
- நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக சரிந்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து ஆனது நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.
தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.