28, 29-ந்தேதிகளில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
- குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
சென்னை:
வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதே போல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 28, 29-ந் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களிலும், வருகிற 28-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 28, 29-ந் தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 28-ந் தேதி தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.