தமிழ்நாடு

மாணவர்களுக்கு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை: ஜனவரி 2-ந்தேதி பள்ளி மீண்டும் திறப்பு

Published On 2023-12-22 04:46 GMT   |   Update On 2023-12-22 05:45 GMT
  • தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
  • மீண்டும் ஜனவரி 2-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை:

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதால் மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்தன. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வந்த தேர்வுகள் இன்று முடிகிறது. நாளை (23-ந்தேதி) முதல் ஜனவரி 1-ந்தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று மாலையுடன் தேர்வு முடிந்து விடுகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் வருகிறது. அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News