துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் தங்கம் சிக்கியது
- விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
- இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவர் தான் கொண்டு வந்த டிராலி பேக்கில் பல்வேறு வடிவங்களில் மறைத்து முலாம் பூசி தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மொத்தம் 322 கிராம் எடைகொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 17 ஆயிரத்து 718 ஆகும்.
இதேபோல் ஏர் இந்தியா விமானம் ஒன்று துபாயில் இருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது ஒரு பயணி கொண்டு வந்த உடமைகளுக்கு நடுவே கார் ஸ்பீக்கர், இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 857 கிராம் எடை உள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.51 லட்சத்து 84 ஆயிரத்து 850 ஆகும். 2 கடத்தல் சம்பவங்களிலும் தொடர்புடைய பயணிகளிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.