தமிழ்நாடு

வீட்டுக்குள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி வெட்டிப்படுகொலை

Published On 2022-09-27 06:48 GMT   |   Update On 2022-09-27 06:48 GMT
  • சந்துருவை தப்பி ஓட விடாமல் மடக்கிய கும்பல் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.
  • பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

வண்டலூர்:

மறைமலைநகர் அடுத்த, தைலாவரம் பகுதியை சேர்ந்தவர் வைகோ என்கின்ற சந்துரு(வயது28). கஞ்சா வியாபாரி. இவரது மனைவி வினிதா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சந்துரு மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு அவர், வீட்டில் மனைவியுடன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது, 8 பேர் கும்பல் திடீரென சந்துருவின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் சந்துருவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துருவின் மனைவி வினிதா அவர்களை தடுக்க முயன்றார்.

ஆனாலும் சந்துருவை தப்பி ஓட விடாமல் மடக்கிய கும்பல் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தடுக்க முயன்ற வினிதாவின் கையிலும் பலத்த வெட்டு விழுந்தது.

உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கொலையாளிகள் விட்டு சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலையுண்ட சந்துரு நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடியின் கூட்டாளியாக இருந்து உள்ளார். சமீபத்தில் அந்த ரவுடியின் கூட்டாளிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வீடு புகுந்து மனைவி கண்முன் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News