தமிழ்நாடு

சென்னையில் மாணவர்களை மிரட்டும் காய்ச்சல்- பீதி தேவையில்லை என்கிறார்கள் டாக்டர்கள்

Published On 2022-06-28 04:10 GMT   |   Update On 2022-06-28 04:10 GMT
  • ஒன்றிரண்டு நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
  • காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களிடம் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை.

சென்னை:

பள்ளிகள் திறந்து 2 வாரம் ஆகிவிட்டது. ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் பலர் காய்ச்சல், சளி, தொண்டை வலியால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பெற்றோர்களும் பயத்தின் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்கிறார்கள். பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்தார்கள். கொரோனாவுக்கும் காய்ச்சல்தான் அறிகுறி என்று கூறப்பட்டது. எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதும் பெற்றோர்கள் பீதி அடைகிறார்கள். பலர் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

குழந்தைகள் நல மருத்துவர்கள் இதுபற்றி கூறும்போது, 'பீதி அடைய தேவையில்லை. இது சாதாரணமான வைரஸ் காய்ச்சல் தான். தொண்டை வலி, இருமல், சளி எல்லாம் இதனால் ஏற்படுவது தான்.

சிலருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தியும் இருக்கிறது. இது சீசன் காய்ச்சல். செப்டம்பர் முதல் ஜனவரி மாதங்களுக்கு இடையிலான காலகட்டங்களில் அதிகமாக இருக்கும். இப்போது முன்கூட்டியே வந்துள்ளது. அவ்வப்போது லேசான மழை, அதிகமான வெயில் போன்ற காரணங்களால் இவை உருவாகலாம்.

ஒன்றிரண்டு நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களிடம் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கிறது. அதுவும் பயப்பட தேவை இல்லை.

3 அல்லது 4 நாட்கள் ஆகியும் காய்ச்சல் குறையாமல் இருப்பது, உடல் சோர்ந்து போவது, மூச்சு விட சிரமம், மிக குறைந்த அளவே சாப்பிடுவது, வாந்தி தொடர்ந்து இருப்பது போன்றவை காணப்பட்டால் மருத்துவரை அணுகினால் போதும்.

முக கவசம் அணிவது, இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது, வீட்டு உணவுகளையே சாப்பிடுவது, காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News