தமிழ்நாடு

குமுளியில் சென்னை போலீஸ்காரர் ரத்த வாந்தி எடுத்து பலி- தந்தை போலீசில் புகார்

Published On 2023-07-19 05:39 GMT   |   Update On 2023-07-19 05:39 GMT
  • அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
  • சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கூடலூர்:

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது இரட்டை மகன்கள் அஜித்கபூர் (வயது 28) மற்றும் அனில் கபூர் (28). இதில் அஜித்கபூர் சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மற்றொருவரான அனில் கபூர் சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான லோயர் கேம்ப்க்கு வந்தார். அவரை தந்தை அழகர்சாமி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனுக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை என்றும் அவர் எவ்வாறு இறந்தார்? என உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News