தமிழ்நாடு

புதிய பஸ் நிலையம் அமைக்க சொந்த நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி

Published On 2024-04-17 05:01 GMT   |   Update On 2024-04-17 05:01 GMT
  • பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
  • புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News