தமிழ்நாடு

என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்தனர்: இலங்கை சேர்ந்த 3 பேரை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படையினர்

Published On 2023-08-09 07:16 GMT   |   Update On 2023-08-09 07:16 GMT
  • கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
  • படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர்.

வேதாரண்யம்:

நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடப்பது உண்டு. இந்நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறைமுகம் கடல் பகுதியில் சுமார் 4 நாட்டிக்கல் தொலையில் ஒரு படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கு இன்று காலை தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த படகையும், அதில் இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு வேதாரண்யம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 25), ஸ்ரீகாந்த் (37), ரீகன் (45) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News