தமிழ்நாடு

மாணவி பிரியா மரணம் விவகாரம்- மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு

Published On 2022-11-18 10:57 GMT   |   Update On 2022-11-18 10:57 GMT
  • முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
  • வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது.

தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.

பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 15ம் தேதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

அதில், இதுபோன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளோம். நாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளனர். ஆனால், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.

சாட்சிகளை கலைக்க மாட்டோம். ஐகோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், முன்ஜாமின் மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, மருத்துவர்கள் தரப்பு வாதத்தின்போது, "பிரியாவின் அறுவை சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்த இருவரும் நன்றாக உள்ளனர். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மருத்துவ குழுவினர் விசாரணைக்கு ஆஜராக வேண்டி உள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

பின்னர், "மருத்துவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி "தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளதால் விசாரணை நடத்த அவகாசம் வேண்டும். உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும். ஆனால், எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரண் அடையுங்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News