காட்டுமன்னார்கோவில் அருகே கவர்னருக்கு கருப்புகொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
- அண்ணாமலை பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் நடைபெறும் 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
- கவர்னர் ஆர்.என்.ரவியின் வருகையொட்டி புதுவை மாநிலம், கடலூர் மாவட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழா இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதற்காக கவர்னர் நேற்று இரவு சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக அண்ணாமலை பல்கலைகழக விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகரன், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், அண்ணாமலை பல்கலைகழக துணை வேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல்,தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நேற்று இரவு அண்ணாமலை பல்கலைகழக விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதனைதொடர்ந்து இன்று காலை அண்ணாமலை பல்கலைகழக அரங்கில் பதக்கம் பெறும் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பின்னர் காரில் அங்கிருந்து புறப்பட்டு காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமத்திற்கு சென்றார்.
காட்டுமன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் செல்லும் வழியில் பெரியகுளம் பகுதியில் கவர்னருக்கு கருப்புகொடி காட்டுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கவர்னர் ஆதனூர் சென்று அங்கு நடைபெற்ற நந்தனார் குருபூஜையில் பங்கேற்றார். விழா முடிந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
பின்னர் அண்ணாமலை பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் நடைபெறும் 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்.
பட்டமளிப்பு விழா முடிந்து மாலை 5.30 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வழியாக சென்னை செல்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவியின் வருகையொட்டி புதுவை மாநிலம், கடலூர் மாவட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.