தமிழ்நாடு செய்திகள்

மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published On 2023-01-25 16:23 IST   |   Update On 2023-01-25 16:23:00 IST
  • ம.தி.மு.க. சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
  • பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் முருகன், செங்குட்டுவன், பழனிவேல் உள்ளிட்டவர்கள் சென்று மரியாதை செலுத்தினர்.

சென்னை:

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அங்கு சென்று தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் விருகம்பாக்கம் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், இயக்குனர் ஜெயசீலன் ஆகியோரும் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த மூலக்கொத்தளம் வந்தார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுடன் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், எபிநேசர், தாயகம் கவி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், பி.டி.பாண்டிச் செல்வம், மண்டல தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் செந்தில் குமார், சுரேஷ், நிர்வாகிகள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோபி, தீனதயாளன், வி.வி.ரமேஷ், ஆர்.எம்.டி. ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ம.தி.மு.க. சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், ராஜேந்திரன், மகேந்திரன் மற்றும் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் முருகன், செங்குட்டுவன், பழனிவேல் உள்ளிட்டவர்கள் சென்று மரியாதை செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் தலைமையில் நிர்வாகிகள் பாக்கிய லட்சுமி, ஆனந்தராஜ், கோகுல், சலீம், கார்த்திக், அரிபிரசாத், ஜெகன் உள்ளிட்டவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், அம்பேத் வளவன் வீர ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல வளசரவாக்கத்தில் மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்.எல்.ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகரராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், ராஜா, நிர்வாகிகள் கனிமொழி தனசேகரன், கவுன்சிலர் ரத்னா லோகேஷ், துரை ராஜ், தங்கராஜ், தென்னரசன், ரஞ்சித்குார், வட்ட செயலாளர்கள் கோவிந்த ராஜ், மைக்கேல், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

அன்னை தமிழைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றாண்டுக்கான மொழிப்போர் ஈகியர்களின் நாள் இந்நாள். இந்த நாளில் அவர்களின் ஈகத்தை போற்றுவோம்.

500-க்கும் மேற்பட்ட ஈகியர்கள் தங்களின் இன்னுயிரை ஈந்து, இந்தியிடமிருந்து மீட்டெடுத்த அன்னை தமிழின் இன்றைய நிலை வேதனை அளிக்கிறது.

ஒருபுறம் இந்தியும், சமஸ்கிருதமும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு அரியணையும் இல்லை. மணி முடியும் அணிவிக்கப்படவில்லை.

தமிழைக் காக்கும் போராட்டம் என்ற நெடும் பயணத்தின் தொடக்கமாக தாய்மொழி நாளில் நான் தொடங்கவுள்ள 'தமிழைத் தேடி' பயணம் அமையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அன்னை தமிழ்மொழியைக் காத்திட தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீர வணக்க நாளில் அவர்களை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம்.

மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்பதை மறவாமல் அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News