விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வெல்லும்- பயிற்சியாளர் நம்பிக்கை

Published On 2022-07-26 10:43 IST   |   Update On 2022-07-26 11:41:00 IST
  • இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் பங்கேற்கின்றன.
  • விஸ்வநாதன் ஆனந்த் 50 வயதை கடந்தாலும் செஸ் உலகில் இன்னும் மிகப் பெரிய சக்தியாக இருக்கிறார்.

சென்னை:

மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் ( 30 வீரர் , வீராங்கனைகள்) பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் 'ஏ' அணி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய பெண்கள் 'ஏ' அணி தங்கப்பதக்கம் வெல்லும் என்று பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அணியில் உள்ள வீராங்கனைகள் பெரும்பாலானவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். பல ஆண்டுகளாக உயர்ந்த நிலையில் ஆடி வருகின்றனர். இதனால் மகளிர் 'ஏ' அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டிக்காக அணியை தயார்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. அவர்கள் நல்ல உடல் நிலையில் இருக்கிறார்கள். அவர்களது மனநிலையும் சரியான நிலையில் உள்ளதால் அழுத்தம் இல்லாமல் செயல்பட முடியும்.

வலிமையான ரஷியா சீனா பங்கேற்காததால் இரு பிரிவுகளிலும். ( ஓபன் மற்றும் பெண்கள்) இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்பதால் சாதகமும் பாதகமும் என இரு நிலையும் இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது சதுரங்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த விளையாட்டுக்கும் பெரிய ஊக்கமாக இருக்கும். விளையாட்டை இளைஞர்கள் அதிக ஆர்வமாக எடுத்து கொள்வார்கள். மேலும் அதை ஒரு தொழிலாக கருதுவார்கள்.

விஸ்வநாதன் ஆனந்த் 50 வயதை கடந்தாலும் செஸ் உலகில் இன்னும் மிகப் பெரிய சக்தியாக இருக்கிறார். மேலும் தொடர்ந்து மக்களை ஊக்கு வித்து வருகிறார்.

இவ்வாறு பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் கூறினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கம் கிடைத்துள்ளது. 2020-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் நடந்த போட்டியில் இந்திய அணி ரஷியாவுடன் இணைந்து தங்கம் வென்றது. 2014-ம் ஆண்டு நார்வேயில் நடந்த போட்டியிலும், கடந்த ஆண்டு இணையம் வழியாக நடந்த போட்டியிலும் வெண்கல பதக்கம் கிடைத்தது.

Tags:    

Similar News