தமிழ்நாடு செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: இந்தியாவுக்கு 3-வது இடம்

Published On 2022-07-04 16:02 IST   |   Update On 2022-07-04 17:50:00 IST
  • செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா ஏற்கனவே இரண்டு அணிகளை அறிவித்து இருந்தது.
  • தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது.

உலக செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் தமிழக அரசு இணைந்து நடத்தும் செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஓபன், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது.

ஓபன் பிரிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 187 அணிகள் கலந்து கொள்கின்றன. பெண்கள் பிரிவில் 162 அணியினர் பதிவு செய்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தர வரிசையை சர்வதேச செஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டுக்கான புள்ளிகள் 2771 ஆகும். அதற்கு அடுத்த படியாக அசர்பெய் ஜான் (2705) 2-வது இடத்தில் இருக்கிறது. போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு 3-வது தரவரிசை அளிக்கப்பட்டுள்ளது. தரவரிசை புள்ளிகள் 2696 ஆகும். நார்வே 4-வது வரிசையில் உள்ளது.

சமீப காலங்களில் செஸ் ஒலிம்பியாட்டில் ரஷியா, சீனா அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரு நாடுகளும் இந்த போட்டியில் விளையாடவில்லை. உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா போட்டியில் இருந்து விலகி உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா ஏற்கனவே இரண்டு அணிகளை அறிவித்து இருந்தது. தற்போது 3-வது இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 அணிகளில் 5 தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர்.

Tags:    

Similar News