தமிழ்நாடு

சென்னை-பெங்களூருக்கு ரூ.2ஆயிரத்தில் விமான பயணம்

Published On 2023-04-19 07:25 GMT   |   Update On 2023-04-19 07:25 GMT
  • வரும் நாட்களிலும் விமான கட்டணம் ரூ.1,700 முதல் ரூ. 2 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சென்னை-பெங்களூர் பயணத்துக்கு பொதுமக்கள் சாலை அல்லது ரெயில் வழி பயணத்தை பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.

சென்னை:

சென்னை மற்றும் பெங்களூர் முக்கிய தொழில் நகரங்களாக உள்ளன. இதனால் இந்த 2 நகரங்களுக்கு இடையேயான பஸ், ரெயில், விமான போக்குவரத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் முழு அளவில் இருக்கும்.

இந்த நிலையில் சென்னை-பெங்களூர் ஒரு வழி விமானக் கட்டணம் ரூ.2 ஆயிரமாக குறைந்து உள்ளது. இது கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டணத்தை விட மிகக்குறைவு ஆகும்.

விமான நிறுவனங்கள் விடுமுறை காலத்தில் அதிக பயணிகளை ஈர்க்க இந்த கட்டண குறைப்பு செய்ததாக தெரிகிறது.

வரும் நாட்களிலும் விமான கட்டணம் ரூ.1,700 முதல் ரூ. 2 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற திங்கட்கிழமை இந்த கட்டணம் ரூ.900 மாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை -பெங்களூர்- மைசூரு வழித்தடத்தில் வந்தேபாரத் ரெயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

காட்பாடி மற்றும் பெங்களூரில் மட்டுமே நிற்கும். தற்போது புதன்கிழமையை தவிர்த்து இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கட்டணம் ரூ.995 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விமான டிக்கெட் ஏஜென்சி ஊழியர் ஒருவர் கூறும்போது, சென்னை-பெங்களூர் பயணத்துக்கு பொதுமக்கள் சாலை அல்லது ரெயில் வழி பயணத்தை பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.

இது விமானப் பயணத்துடன் ஒப்பிடும்போது மிகவும் வசதியானதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் பெங்களூர் விமான நிலையம் நகரத்தின் மையத்தில் இல்லை.தற்போது பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடப்பதால் இது சீசன் இல்லாத நேரம் ஆகும்.

எனவே விமான நிறுவனங்கள் பெங்களூர் வழியாக ஐதராபாத் மற்றும் பிற இடங்களுக்குச் சென்று சென்னை-பெங்களூரு இடையேயான பயணிகளை ஈர்க்க விரும்புகிறது. விமானம் காலியாகச் செல்வதைத் தடுக்க இந்த கட்டண குறைப்பு ஆகும். தற்போது பெரும்பாலான குடும்பத்தினர் விமான பயணத்தை விருப்பமாக தேர்வு செய்கிறார்கள் என்றார்.

இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த பயணி ஒருவர் கூறும்போது, நான் வாரத்திற்கு ஒருமுறை பெங்களூர் செல்வேன். தற்போது விமான கட்டணம் குறைந்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் நான் ரெயில் பணத்தை தவிர்த்து விமானத்தில் பயணம் செய்து வருகிறேன். ரெயில் பயணம் சோர்வாக இருக்கும்" என்றார்.

Tags:    

Similar News