தமிழ்நாடு

வில்லிவாக்கம் ஏரியில் அமைகிறது கண்ணாடி தொங்கு பாலம்- ஒரே நேரத்தில் 100 பேர் அனுமதி

Published On 2022-12-05 11:54 GMT   |   Update On 2022-12-05 11:54 GMT
  • சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
  • வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தன்வசம் 11.50 ஏக்கர் இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதம் உள்ள 27.50 ஏக்கர் இடத்தை சீரமைப்பு பணிக்காக மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.

ஏற்கனவே இந்த ஏரியின் ஆழம் 1 மீட்டர் மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியை தொடர்ந்து 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. அதன் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரை யரங்கம், மோனோ ரெயில் சேவை, நீர்விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையிலேயே முதல்முறையாக வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்ணாடி தொங்கு பாலம் ரூ.8 கோடி செலவில் 250 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் முறையாக ஏரியில் இது போன்ற கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலம் 2 பேர் அருகருகே நடந்து செல்லும் வகையில் அகலமாக உள்ளது. அந்த பாலத்தில் நடந்து சென்றபடி பொது மக்கள் வில்லிவாக்கம் ஏரியின் அழகை ரசிக்க முடியும்.

மேலும் கண்ணாடி அடிவாரம் வழியாக தண்ணீரையும் பார்க்க முடியும். இந்த பாலத்தின் வழியாக 500 பேர் சென்றாலும் தாங்கக்கூடிய உறுதி கொண்டது. ஆனாலும் பாதுகாப்பு கருதி ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே இந்த கண்ணாடி பாலத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

பார்வையாளர்களின் எடை மற்றும் அவர்களால் ஏற்படும் அசைவுகள், குலுங்குதல் ஆகியவற்றை கணக்கிட்டே ஒரே நேரத்தில் 100 பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் 150 மீட்டர் கண்ணாடி பேனல் உள்ளது. ஏரி மட்டத்தில் இருந்து 4 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த தொங்கு பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 50 மாணவர்களுடன் இணைந்து கண்ணாடி தொங்கு பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்தனர். அவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை இன்னும் 15 நாட்களில் சமர்பிக்க உள்ளனர்.

இந்த கண்ணாடி தொங்கு பாலம் வருகிற மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News