தமிழ்நாடு செய்திகள்

செல்போன் வெடித்து சிதறி காப்பீடு திட்ட அலுவலர் படுகாயம்

Published On 2023-06-13 10:04 IST   |   Update On 2023-06-13 10:04:00 IST
  • செல்போன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இந்த சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது40). இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நெல்லையில் வேலை பார்த்து வருகிறார்.

ஆறுமுகநேரி கணேசபுரத்தில் வசிக்கும் தனது சித்தியின் வீட்டிற்கு இசக்கியப்பன் நேற்று சென்றுள்ளார். அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் செல்போன் வேகமாக சூடாகியுள்ளது. இதனை உணர்ந்த இசக்கியப்பன் அதனை எடுக்க நினைத்துள்ளார்.

ஆனால் மறு வினாடியே அந்த செல்போன் பட்டாசு வெடித்தது போன்ற ஓசையுடன் வெடித்து விட்டது. இதனால் சட்டையில் தீ பிடித்து எரிந்ததால் இசக்கியப்பன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செல்போன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இந்த சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News